புதுடெல்லி: லஜ்பத் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மோசமான விபத்தில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் மோதியது. பென்ஸ் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஓட்டுநர் உரிமம் பெறாத டிரைவரை கார் உரிமையாளர் பணிக்கு சேர்த்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, கார் உரிமையாளர் மற்றும் விபத்தில் படுகாயம் ஏற்படுத்தினார் என டிரைவர் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஒரே எப்ஐஆரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து, உயர்நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு, காயம் அடைந்தவரும், விபத்து ஏற்படுத்திய தரப்பும் 35,000க்கு பேசி தீர்த்து, சமரசம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிபதி சுப்ரமண்யம் பிரசாத்திடம் போலீசார் தெரிவித்தனர். போலீஸ் தகவலை ஏற்ற நீதிபதி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இனி வாகனம் ஓட்டக்கூடாது என டிரைவரை கண்டித்தும், மீண்டும் ஒரு முறை விபத்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கார் உரிமையாளரை எச்சரித்தும் வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தார்.